தொட்டியம், நவ.19: விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இலவசமாக சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 62வது குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டி துவக்க விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி சிறப்புரையாற்றினார். திருச்சி கலெக்டர் சிவராசு, முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முன்னாள் எம்பி ரத்தினவேல், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தடகள போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வருகிற 23ம் தேதி வரை 6 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து 32 மாவட்டங்கள், விளையாட்டு விடுதி என 33 அணிகளில் இருந்து ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு வீரர்கள் வீதம் மொத்தம் ஒரு போட்டிக்கு 66 பேர் கலந்து கொள்கின்றனர். இதில் மொத்தமாக 2,099 மாணவிகள், 2,236 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை (20ம் தேதி) வரை மாணவியர்களுக்கும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாணவர்களுக்கும் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது.