கும்பகோணம், நவ. 19: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் சம்பா பருவ நெல் விதை பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் (பொ) நாராயணசாமி ஆய்வு செய்தார். அதன்படி கும்பகோணம் வட்டாரம் சாக்கோட்டையில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணை, அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருதாநல்லூரில் உள்ள விவசாயிகளின் நெல் விதைப்பண்ணை வயல்கள் மற்றும் விதை ஆய்வு பிரிவில் நடந்த பணிகள் குறித்து கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் (பொ) நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாக்கோட்டை அரசு விதை பண்ணையில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்து வரும் அனைத்து சான்றுப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள கிடங்கில் விதை சுத்திகரிப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள வயல் மட்ட நெல் மற்றும் உளுந்து விதைகளை உடனடியாக சுத்தம் செய்து சுத்திகரிப்புக்கு பின் பெறப்பட்ட விதைகளிலிருந்து விதை மாதிரிகளை எடுத்து அதை உடனடியாக தஞ்சை காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். விதை பரிசோதனை நிலையத்தில் இருந்து பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற விதை குவியல்களுக்கு சான்றட்டை அளித்து உடனடியாக கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.