திருவாடானை, நவ.19: திருவாடானை பகுதியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மழைக்கு ஒழுகுகின்றன. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவாடானையில் இருந்து கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக ஆனந்தூர், திருவெற்றியூர், கள்ளிக்குடி, சோழந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், காரங்காடு, கொக்கூரணி ஓரியூர், தேவகோட்டை, நெய்வயல், செவ்வாய்பேட்டை, தளிர் மருங்கூர்,ஆயிர வேலி ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் உள்ள இருக்கை ,ஜன்னல் மற்றும் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மழை நேரங்களில் இந்த பஸ்களில் மழை நீர் ஒழுகி பயணிகளை சிரமத்திற்கு ஆளாக்குகின்றன. அதிகாரிகள் இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.