ஒட்டன்சத்திரம், நவ.19: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த இடத்திலேயே எரிப்பதால் பொதுமக்கள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 1 முதல் 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாங்கி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். பழநி சாலை, வேடசந்தூர் சாலை, சின்னக்குளம், திண்டுக்கல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவாகி துர்நாற்றத்துடன், பொதுமக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் புகை மூட்டத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.