ஈரோடு, நவ. 19: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது. ஈரோடு மற்றும் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் விசைத்தறி கூடங்களில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி மூலமாக நேரடியாக 15 ஆயிரம் பேரும், மறைமுகமாக 30 ஆயிரம் தொழிலாளர்களும் பயன் பெற்று வருகின்றனர். 50 ஆயிரம் விசைத்தறிகளில் 25 சதவீத விசைத்தறி கூடங்களில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. 75 சதவீத விசைத்தறி கூடங்களில் ரேயான் எனப்படும் செயற்கை இழை நூலை கொண்டு தனியாக சொந்த உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த 3 மாதமாக துணியின் விலை நூலின் அடக்கத்திற்கு குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் நடத்தி வருகிறோம்.