அரியலூர், நவ. 13: அரியலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மூடுபனியால் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மழை அதிகளவு பெய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்தது. இதனால் பல ஏரி, குளம், ஆறு, வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.இருப்பினும் பெய்த மழையை வைத்தும், ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் ஒருபோக சாகுபடியாவது நடைபெற வேண்டும் என்று விவசாயிகளும் அதற்கான விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க தற்போது அரியலூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் அடித்தது. கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. மூடுபனியால் சாலைகளில் சென்ற இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றது.