அந்தியூர், நவ.12: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் 17.50 அடி உயரத்தில் கெட்டிசமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர் வருகிறது. வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் எண்ணமங்கலம் ஏரி, வரட்டுப் பள்ளம் அணை ஆகியவை நிரம்பி உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை கெட்டி சமுத்திரம் ஏரி அதன் முழு கொள்ளளவான 17.48 அடியை எட்டியது. உபரிநீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பி உள்ளது.இந்த ஏரியின் மேற்குகரை வழியே அந்தியூரில் இருந்து பர்கூர், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், ஆலாம்பாளையம், செல்லம்பாளையம், மூலக்கடை செல்லும் சாலை அமைந்துள்ளது.தொடர் மழையால்இந்த சாலையில் கரைக்கும், சாலைக்கும் இடையே சுமார் 300 மீட்டர் அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.