செங்கல்பட்டு, நவ.12: சிங்கப்பொருள் கோயில் பகுதியில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணியை துவக்க வலியுறுத்தி பாமக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையின் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர்.இதுதொடர்பாக கடந்த ஆண்டு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலை துறை, உடனடியாக பணியை துவங்கி விரைவில் மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியை மீண்டும் துவக்க வலியுறுத்தி, பாமக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று சிங்க பெருமாள்கோயில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்தது.பாமக துணைப் பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், நகர செயலாளர் சரவணன், தொகுதி அமைப்பு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.