பொன்னேரி, நவ. 12: மீஞ்சூர் அருகே ரெட்டிப்பாளையத்தில் முறையாக குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டிவரும் ஊராட்சி அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் ஊராட்சியில் ரெட்டியபாளையம், அத்தமஞ்சேரி, சோமஞ்சேரி ஆகிய காலனி மற்றும் கிராமப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த 3 மாதத்துக்கு மேலாக மின்மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. அப்பகுதியினர் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். நிலத்தடி நீரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஏழை மக்களுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இப்பிரச்னை குறித்து மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மகளிர் குழுக்களும், கிராம மக்களும் புகார் தெரிவித்தனர். எனினும், இங்கு குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.