சிவகாசி, நவ.8: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: படித்து முடித்து வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600 மாதந்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை புதுப்பித்து வருபவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்பதிவேடுகளில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனில் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.