சாயல்குடி, நவ. 8: முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளின் கிராமபுற நூலகங்கள் பூட்டியே கிடப்பதால், படிக்க முடியாமல் இளைஞர்கள், மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள 48 ஊராட்சி மன்றங்களுக்கு, கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010 வரை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் கிராம நூலகங்கள் திறக்கப்பட்டது. நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. நூலகத்தை பராமரிக்க கிளை நூலகர் நியமிக்கபடாததாலும், சில இடங்களில் நியமிக்கப்பட்ட நூலகர், நூலகத்திற்கு வராததாலும், அனைத்து நூலகங்களும் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது, அங்கிருந்த சேர், டேபிள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் மாயமாகி உள்ளது, பெரும்பாலன புத்தகங்களும் மாயமாகிவிட்டது.