நாகர்கோவில், நவ.7: தமிழகம் முழுவதும் 25 இஎஸ்ஐ மருந்தகங்களில் ஆயுஷ் பிரிவுகள் தொடங்க தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொழிலாளர் நலனுக்காக இஎஸ்ஐ மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற காப்பீடு நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் இதன் வாயிலாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தில் இஎஸ்ஐ மருந்தகங்களில் புதிதாக ஆயுஷ் பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் தரப்பில் புதுடெல்லியில் உள்ள இஎஸ்ஐ கார்பரேஷனின் துணை மருத்துவ ஆணையருக்கு (ஆயுஷ்) வேண்டுகோள் வைத்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள மருந்தகங்களில் ‘ஆயுஷ்’ பிரிவு தொடங்க இஎஸ்ஐ விதிமுறைகளின்படி அனுமதி வழங்கங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநரின் வேண்டுகோளை தமிழகத்தில் 25 இஎஸ்ஐ மருந்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி பிரிவுகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.