மதுரை, நவ. 7: உலகதமிழ் சங்க கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் ஐந்து கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான, பல ஆயிரக்கணக்கான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில், 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட தொல்பொருட்கள், மதுரை தல்லாகுளத்திலுள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அரங்குகளில் தொல்பொருட்கள் வரிசையாக வைத்து அதன் சிறப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் விளக்கப்பட்டுள்ளன. தங்கம், அணிகலன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்ணாடி கூண்டுக்குள் பாதுகாப்புடன் உள்ளன. சங்ககால வாழ்க்கை முறை, மக்களின் எழுத்தறிவு, நீர்மேலாண்மை, கீறல் மற்றும் குறியீடுகள், கட்டிட தொழில் நுட்பம், வணிகம், கைவினைத் தொழில், இரும்பு உருக்கு தொழில்நுட்பம், வைகை நதிக்கரை நாகரீகம், நெசவு தொழில் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொல் பொருட்களாக இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இங்கு 600க்கும் அதிக பொருட்கள் பார்வைக்கு இருக்கிறது. நவ.1ல் கண்காட்சி திறக்கப்பட்டு, பொதுமக்கள், மாணவர்கள் அனைத்து நாட்களிலும் தினம் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இலவசமாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தனி அரங்கில் 3டி தொழில் நுட்ப வசதியில், தொல்பொருட்களை தொட்டுப் பார்க்கும் உணர்வு தரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ.1 முதல் ஏராளமானோர் காலை துவங்கி இரவு வரை உலகத் தமிழ் சங்க கட்டிடத்தில் குவிந்து வருகின்றனர்.