சென்னை, நவ. 7: சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் சார்ந்த ரத்த பரிசோதனை, ரேடியோலஜி, டயாலிசிஸ் டெக்னீஷியன், இசிஜி டெக்னிஷியன், கார்டியோ டெக்னிஷியன் உள்பட 15 மருத்துவம் சார்ந்த பட்டய பாடப் பிரிவில் 100க்கும் மேற்பட்ட வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு மாணவிகள் தங்கியுள்ள விடுதி மிகவும் பழுதான நிலையில் இருப்பதாக கூறி, நேற்று முன்தினம் அந்த விடுதியை மருத்துவமனை நிர்வாகம் பூட்டிவிட்டது. இதனால் அங்கு தங்கியுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது உடமைகள் அறைக்குள் இருப்பதால் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து பட்டய படிப்பு படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.