விருத்தாசலம், நவ. 6: விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கடந்த சில மாதங்களாக தவித்து வந்துள்ளனர். இதனால் குடிநீர் இன்றி அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் தெரு மின்விளக்குகள் எதுவும் எரியாமல் கடந்த சில மாதமாக தெரு முழுவதும் இருண்டு கிடந்தது. இதனால் இருள் சூழ்ந்த பகுதிகளை சாதகமாக்கிக்கொண்டு பல சமூகவிரோதிகள் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வீட்டைவிட்டு தெருக்களுக்கு வரமுடியாத சூழ்நிலையில் அப்பகுதி பெண்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.