சிவகாசி, நவ. 6: தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் அதிகளவில் பட்டாசுகள் விற்பனை ஆனதால் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி பணியை உரிமையாளர்கள் துவக்கியுள்ளனர். சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுள் இந்தியா முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒருசில மாதங்களில் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்கள் வழங்கி முன்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆர்டாின் பேரில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபடுவர். பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்ததால் வடமாநில வியாபாரிகள் கடந்த ஆண்டு ஆப்சீசன் ஆர்டர்களை வழங்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. இதன் காரணமாக பட்டாசுகளுக்கு கடந்த ஆண்டு கடும் தட்டுப்பாடு நிலவியது.பட்டாசுகள் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சிறிய, நடுத்தர ஆலைகளும் பட்டாசு விலையை பல மடங்கு உயர்த்தினர்.