அருப்புக்கோட்டை, நவ.6:விருதுநகர் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள மேலத்தெரு அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் மேலத்தெரு அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு சுமார் 60 வீடுகள் உள்ளன. இந்த காலனி அருகே உள்ள தும்பக்குளம் கண்மாயிலிருந்து மழை காலங்களில் வெளியேறும் உபரி நீர் செல்லும் ஓடை அருந்ததியர் காலனியை ஒட்டி செல்கிறது. அங்கிருந்து ஓடை வழியாக ராமசாமிபுரம் கண்மாய்க்கு மழைநீர் சென்றடையும். பல வருடங்களாக இந்த ஓடையை பராமரிக்காமல் விட்டதால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதில் கழிவுநீரும் குளம்போல் தேங்கி உள்ளது. மழை காலத்தில் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஓடை வழியாக செல்ல முடியாமல் காலனிக்குள் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கூட தண்ணீர் காலனி வீடுகளுக்குள் சென்று விட்டது. ஓடையை தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும் என காலனி மக்கள் புகார் கொடுத்தும் ஊராட்சியில் நடவடிக்கை இல்லை.
இந்த பகுதியில் ஆண்கள், பெண்கள் குளியலறை உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனருகே மகளிர் கழிவறையும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. தெருக்களில் உள்ள வாறுகால்கள் முறையாக கட்டப்படவில்லை. கட்டி முடிக்கப்பட்டு சில நாட்களிலேயே பெயர்ந்து விட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.