ராமநாதபுரம், நவ.6: ராமநாதபுரம் வட்டார உழவர் மையத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சொர்ண மாணிக்கம் தலைமையில் தென்னை நீரா பானம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி விவசாயிகளுக்கு நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சேக்அப்துல்லா, தென்னை விவசாயிகளிடம் நீரா பானம் தயாரித்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றியும், நீரா பானம் உடலுக்கு உகந்தது, வெயிலுக்கு இதமானது. தென்னை விவசாய ஆர்வலர் குழுக்கள் அனைவரும் ஒன்று கூடி நீராபானம் தயாரித்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பொருட்களை உற்பத்தி செய்து பயனடையலாம் என்று விவசாயிகளிடம் கூறினார். வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் (பொ) பரமக்குடி செல்வம், கூட்டுப்பண்ணைய திட்டத்தின் மூலம் தென்னை விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் நீராபானம் தயாரித்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் பொருட்களை உற்பத்தி செய்து வருமானத்தை பெருக்கி கொள்ளலாம். விவசாயிகள் பயிற்சி மற்றும் பட்டறிவு பயணங்கள் ஏற்பாடு செய்து தரப்படும் என விவசாயிகளிடம் கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.