பரமக்குடி, நவ.6: பரமக்குடி அருகே நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி திருக்கோயில் உள்ளத. தென்னாட்டில் முகம்மதியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் முல்லா சாகிப் என்ற மன்னன், வாய் பேச இயலாத தன் மகளுடன் நயினார்கோவில் நாகநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்துள்ளார். கோவில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடிவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வருகை தந்தபோது, ‘அல்லா நயினார் ஆண்டவர்’ என்று வாய் திறந்து பேசினாளாம் மன்னரின் மகள். இதனால் அன்று முதல் இந்தக் கோயில், ‘நயினார் கோவில்’ என வழங்கலாயிற்று என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தோஷ நிவர்த்திக்காக வருடம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். உடலில் காணப்படும் அரும்பாறை மற்றும் நாக தோஷம் நீங்குவதற்காவும் பக்தர்கள் இங்கு வந்து வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி விட்டு, சாமி தரிசனம் செய்வது வழக்கம்.