திருவாரூர், நவ.6: திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு மானியத்துடன் வழங்கப்படும் ஸ்கூட்டர் திட்டத்தில் இதுவரையில் ரூ 6 கோடியே 97 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையிலும் ,நாகை எம்பி செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் 715 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டி மற்றும் 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ33 லட்சம் வங்கி கடன் போன்றவற்றினை அமைச்சர் காமராஜ் வழங்கி பேசுகையில், ஏழை எளிய சாதாரண மக்கள் நலத் திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த பெண்களுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.