புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் பண்ணையில் வளரும் கோழிகளுக்கு மர்ம நோய் ஏற்பட்டு செத்து மடிவதால் கோழி வளர்ப்போர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் பல ஆயிரம் விவசாயிகள் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தில் கிடுகு அல்லது ஆஸ்பட்டாஸ் சீட் உள்ளிட்ட வற்றை கொண்டு கொட்டகை அமைத்து அதில் கோழி குஞ்சுகளை வாங்கி விட்டு வளர்ந்து வருகின்றனர். சில தனியார் நிறுவனங்கள் அந்த கோழி குஞ்சுகளை மொத்தமாக பண்ணைக்கே கொண்டு வந்து அதனை விட்டு அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகளை வழங்கிவிட்டு செல்கின்றனர். அவ்வப்போது தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் கோழிப்பண்ணைக்கு வந்து கோழி குஞ்சுகளின் வளர்ச்சி மற்றும் வளர்ப்புகளை கண்காணிக்கின்றனர். இந்த கண்காணிப்பின்போது பண்ணை வைத்திருப்போர்களிடம் கோழிகளின் தன்மைகளை எடுத்து கூறி எப்படி தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கிவிட்டு செல்கின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திபாவளி பண்டிகைக்கு முன்பு தொடர்ந்து நல்ல மழை பெய்தது. இந்த மழை விட்டபிறகு தற்போது என்ன காரணத்தினாலோ கோழிகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்து வருகிறது.