ராமேஸ்வரம், நவ. 5: பாம்பன் குந்துகால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதால் பாம்பன் ஊராட்சியில் மட்டும் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுக்கடைகளையும் அகற்றி மதுக்கடை இல்லாத பகுதியாக ராமேஸ்வரத்தை அறிவிக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாம்பனில் இயங்கி வரும் மூன்று டாஸ்மாக் கடைகள் போக ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் மதுவிற்பனையும், 130க்கும் மேற்பட்ட நபர்களும் மதுவிற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அனுமதியோடு மூன்று டாஸ்மாக் கடை என்றால், ராமேஸ்வரம் சரகம் காவல் துறையினரின் ஆசியோடு சட்டத்திற்கு புறம்பான மது விற்பனையும் நடந்து வருகிறது. இதனால் தீவில் வசிக்கும் மீனவர்கள், தினக்கூலிகளின் வருவாய் மதுவினால் கபளீகரம் செய்யப்படுவதுடன் பள்ளி மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையும் சீரழிந்து வருகிறது.