பரமக்குடி, நவ.5: பரமக்குடி ரயில் நிலையத்தில் சுகாதார அலுவலகம் செயல்படாமல் உள்ளதால், ரயில் பயனிகள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி ரயில் நிலையம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. பரமக்குடி ரயில் நிலையத்திற்கு முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, இளையான்குடி, பார்த்திபனூர், நயினார்கோவில், சத்திரக்குடி உள்ளிட்ட மிக முக்கியமான சிறு நகரங்களை இணைப்பதுடன், இந்த பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களையும் இணைத்து வருகிறது. இதனால் பரமக்குடி ரயில் நிலையத்திற்கு தினமும் 300 முதல் 500 பேர் வரை பயணிக்கவும், பயணிகளை வழியனுப்பவும் வந்து செல்கின்றனர். ரயிலில் வரும் பயணிகளும், பயணிகளை வழியனுப்ப வரும் மக்கள் எதிர்பாராத விதமாக தேவைப்படும் சிகிச்சைக்கு ரயில் நிலையத்தில் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும் பயணிகளுக்கு அடிப்படை மற்றும் அவசர சிகிச்சை கொடுப்பதற்கு செவிலியர் மற்றும் ஊழியர்கள் பயனியாற்ற வேண்டும்.