சாயல்குடி, நவ.1: சாயல்குடி பகுதியில் விவசாயம், பனைமரத்தொழில் நடந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக போதிய மழையின்றி விவசாயம் பொய்த்து போய் விட்டது. பனை மரத்தொழிலும் நலிவடைந்து விட்டது. மாற்றுத்தொழில் தெரியாத இப்பகுதியினர் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு ஏற்ற இயற்கை தீவனங்கள் இன்றி பல்வேறு சிரமங்களுடன் வளர்த்து வந்தனர். பருவ காலத்திற்கேற்றவாறு விலைக்கு விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். கிராமங்களில் ஆடுகளை கட்டி போடாமல், வீட்டிற்கு முன் அடையபோடுவது வழக்கம். இதனை பயன்படுத்தி, கடந்த சில நாட்களாக நரிப்பையூர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட சாலையோரங்களில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் ஆடு திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.