வேலூர், நவ.1: ேவலூர் மாநகராட்சியில் 10 நாட்களுக்குள் பழுதான போர்வெல்களை கணக்கெடுத்து மூடுவதற்கு பதிலாக சீரமைக்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.வேலூர் மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் போர்வெல்கள், மின்விளக்குகள் சீரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி உதவி ஆணையர் பிரபு, சுகாதார அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எம்எல்ஏ நந்தகுமார் பேசியதாவது: திருச்சியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து திறந்த நிலை ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. அதேபோல் அணைக்கட்டு தொகுதியில் 6 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் போர்வெல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வாட்ஸ் அப்களில் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் மின்மோட்டார் பழுதை சரிசெய்ய கழற்றி சென்று மீண்டும் மின்மோட்டார் பொருத்தாமலும், பைப்கள் உடைந்தும் உள்ளது. இதுபோன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல்கள் பழுதாகி உள்ளது.