சோளிங்கர், நவ.1: சோளிங்கர் அடுத்த எலத்தூர் அரசு பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து சேதமானது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். சோளிங்கர் அடுத்த நெமிலி அருகே உள்ள எலத்தூர் கொல்லைமேடு பகுதியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இதில் 13 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தும், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.