உப்பூர் அருகே காவு வாங்க காத்திருக்கும் கல்வெட்டு பாலம் சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.31:  ஆர்.எஸ் மங்கலம் அருகே கூத்தன் வயலில் உள்ள பாலம் இடிந்து ஆபத்தை விளைவிக்கும் விதமாக உள்ளது. அதனை சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனில் கடலூர் ஊராட்சியில் கூத்தன் வயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மேற்காக சாலை போடப்பட்டுள்ளது. இச்சாலையின் குறுக்கே ஒரு கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அவை கடந்த ஒரு ஆண்டு காலமாக உடைந்து சேதமடைந்து கம்பிகள் மட்டும் தெரிகிறது. இந்த சாலை வழியாகத்தான் கூத்தன்வயல், கீழ சித்தூர்வாடி, சித்தக்கரைசல் போன்ற கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களும், டூவீலர்களில் செல்வோரும் ஆபத்தான இந்த இடத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏதும் நடந்து விடுமோ என்ற ஒரு வித அச்சத்துடனே பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி விபத்து ஏதும் ஏற்படும் முன்பாகவே உடன் பாலத்தை சீரமைக்க வேண்டும். விபத்தை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: