புதுக்கோட்டை, அக்.31: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (1ம் தேதி) நடைபெற உள்ளது.இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (1ம் தேதி) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர், இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி தகுதிகளையுடைய வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.