சேலம், அக்.25: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், சங்ககிரி, இடைப்பாடி, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள கடைவீதிக்கு காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. கிராமப்பகுதிகளில் இருந்து வரும் மக்களால், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகரிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், குற்றம் நடைபெறுவதை தடுக்கவும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து உட்கோட்டங்களிலும் குற்றம் நடைபெறுவதை தடுக்க குற்ற தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு சங்ககிரி, இடைப்பாடி, ஆத்தூர், தம்மம்ப்பட்டி, தலைவாசல், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் வாழப்பாடி ஆகிய பஸ் ஸ்டாண்டிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.