திருவாடானை, அக். 23: திருவாடானை அரசு மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் செல் கவுண்டிங் மெஷின் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு 25 படுக்கை வசதி கொண்ட உள்நோயாளிகள் பிரிவுடன் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் தினமும் 500க்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில், சிகிச்சைக்கு இன்னும் சற்று அதிகமானோர் வருகின்றனர். மற்ற பகுதியை போல் இங்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து டெங்கு கண்டறிய செல் கவுண்டிங் மெஷின் இல்லை. இதனால் ரத்த மாதிரி எடுத்து ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பரிசோதனை முடிவு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. முடிவு வந்தபின் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் தேவையற்ற செலவும், உடனடி பரிசோதனை முடிவு தெரியாமல் நாட்கள் கடந்து விடுவதால் உயிர் பலியும் ஏற்படுகிறது.