திருவாடி கிராமத்தில் உள்ள கல்வடி கருப்பனசாமி கோயில் மண்டல பூஜை
பரமக்குடி, அக்.23: திருவாடி கிராமத்தில் ஸ்ரீ கல்வடி கருப்பனசாமி கோயில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள திருவாடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்வடி கருப்பனசாமி கோயில் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 4ஆம் தேதி பார்த்தசாரதி பார்த்திபன் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று 48வது நாள் மண்டலாபிஷேகம் யாகசாலையுடன் தொடங்கியது. பரிவார தெய்வங்களான இருளப்ப சுவாமி, பத்திரகாளியம்மன், சோனை கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. மூலவரான ஸ்ரீ கல்வடி கருப்பணசாமிக்கு சந்தனம், குங்குமம், பால், நெய், திருநீர், இளநீர் உள்ளிட்டவைகள் கொண்டு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் கொட்டகை சிவா பூசாரி, காளிமுத்து பூசாரி கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தனர். இந்த மண்டல பூஜையில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், கோயில் குடிமக்களும் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கருப்பணசாமி கோயில் குடிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.