ஏற்காடு, அக்.23: ஏற்காடு மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. மேலும், மலை சார்ந்த இடங்களில் மழையால் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவது அதிகரித்துள்ளது. நேற்று காலை பெய்த பலத்த மழைக்கு சேலத்தில் இருந்து கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை 60 அடிபாலம் அருகில் காலை 11மணியளவில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் மூலம் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.