திருச்சி, அக். 23: தீபாவளி நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் தஞ்சை, புதுகை, மதுரைக்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 30ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது என மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் தீபாவளி நாளுக்கு முதல் மற்றும் 2ம் நாளில் அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் வெளியூரில் வேலையில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி ஏற்றக்கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்த கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கும் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் வாட்ஸ்அப் 96262 73399 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.