விருத்தாசலம், அக். 23: விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீரனூர், மேலப்பாலையூர், மருங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் கரும்பு, நெல் விவசாயம் செய்து வருகின்றனர். திட்டக்குடியில் உள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து வருகின்ற தண்ணீர் ஓடை வழியாக வல்லியம், மேலப்பாலையூர், கீரனூர் வழியாக மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிக்கு சென்றடைகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், வயலில் உள்ள மழைநீர் ஓடையை நோக்கி செல்கிறது. ஆனால் ஓடையை சரிவர தூர்வாரமல் இருப்பதினால் மழைநீர் செல்ல முடியாமல், சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியபோக்கால் கீரனூர், மேலப்பாலையூர், மருங்கூர் கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.