செய்யூர், அக்.23: மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் ஊராட்சி, பழைய காலனியில் அங்கன்வாடி மையம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது பழுதடைந்து, ஆங்காங்கே சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் கசிந்து வருகிறது. இதனால், குழந்தைகள் உட்கார இடமில்லாமல் கடும் அவதியடைகின்றனர். மேலும், மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாமல், வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் அங்கன்வாடி மையம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.