திருச்சி, அக்.18: திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலம் காற்றை தூய்மைப்படுத்தும் பொருள் தயாரிக்கப்பட்டு, நேற்று முதல் அது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.திருச்சி மத்திய சிறையில் 700 தண்டனை கைதிகள், 600 விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு விவசாய பணிகள், இனிப்பு, காரம் தயாரித்தல், பேக்கரி, உணவகம், தையலகம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளில் கைதிகள் டுபடுத்தப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆயுள் தண்டனை பெற்ற 6 கைதிகள் மூலம் காற்றை தூய்மைப்படுத்தும் பொருள் தயாரிக்கப்பட்டு, அது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தேங்காய் மட்டைகளை கரியாக்கி அவற்றுடன் கார்பன் பஞ்சு, லெனன் ஆகியவற்றை பயன்படுத்தி காற்று பரிவர்த்தனை செய்யும்படி காட்டன் துணியால் பேக் உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இதனை அலமாரி, படுக்கை அறை, சமையலறை, வரவேற்பறை, கழிவறை, குளிர்சாதன பெட்டி, காலணிகள், 4 சக்கர வாகனங்களில் வைத்து காற்றை தூய்மைப்படுத்தலாம். இவ்வாறு செய்தால் அலமாரி, பீரோக்களை திறக்கும்போது வாடை வராது. நீண்டதூர பயணத்தின்போது காருக்குள் காற்று மாசுபடுவதை தடுக்கலாம். இந்த பேக் காற்றில் உள்ள மாசுக்களை நீக்கி காற்றை தூய்மையாக்கி ஆரோக்கியமாக வாழ உதவியாக இருக்கும்.