சிறுமி பரிதாப பலி விபத்து ஏற்படுத்திய 2 வாலிபர்களை கைது செய்யகோரி சாலை மறியல் போலீசில் 2 பேர் சரண்

பேராவூரணி, அக். 18: பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் விபத்தில் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. பேராவூரணி அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த அருண்குமார் மகள் சுவேதா (3). இவர் கடந்த 11ம் தேதி ஆவணம்- நெடுவாசல் செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் சுவேதா படுகாயமடைந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா இறந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவர்களை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுபிடித்து போலீசாரிடம் கூறினர்.

ஆனால் விபத்துக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் விபத்துக்கு காரணமான நெடுவாசல் மேலத்தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (23), வடக்கு தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் செந்தமிழரசன் (19) ஆகியோர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: