சத்தியமங்கலம், அக்.18: புஞ்சைபுளியம்பப்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புஞ்சைபுளியம்பட்டி அருகே பனையம்பள்ளி பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற போலீசார் பவானிசாகர்- புஞ்சைபுளியம்பட்டி சாலையில் உள்ள பனையம்பள்ளி மாகாளி அம்மன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் 1.100 கிலோ கஞ்சா பாக்கெட் இருந்தது தெரியவந்தது. காரில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை பிடித்து விசாரித்தபோது சத்தியமங்கலம் அருகே உள்ள சொலவனூர் மேடு கிராமத்தை சேர்ந்த மருதாள் (எ) மரகதம் (55), தனலட்சுமி (50), ராஜா (எ) பேய்ராஜா (34) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதற்காக காரில் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.