பவானி, அக். 18: பவானியில் கைத்தறிகளில் பணியாற்றும் ஜமக்காள நெசவுத் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கைத்தறி நெசவு கூடங்கள் உள்ளன. இதில், ஏராளமான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், இந்தாண்டு கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காமல் கைத்தறி நெசவு கூட உரிமையாளர்கள் இழுத்தடித்து வருகின்றனர். தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் இன்னும் போனஸ் வழங்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கைத்தறிக் கூட உரிமையாளர்களுடன் தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.