புதுக்கோட்டை, அக்.17: இடி மின்னல் தாக்கி படுகாயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான சங்கர், மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அருகே உள்ள வைத்தூர் மற்றும் தொழுதாம்பட்டி சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று விவசாய கூலி வேலை செய்து கொண்டிருக்கும் போது இடமின்னல் தாக்கியது. இதில் வைத்தூரை சேர்ந்த எத்திராஜ் மனைவி சாந்தி(35), ஆறுமுகம் மனைவி விஜயா(47), ராஜேந்திரன் மனைவி கலைசெல்வி(45) தொழுதாம்பட்டியை சேர்ந்த லெட்சுமணன் மனைவி லெட்சுமி அம்மா(65) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.