சாயல்குடி, அக்.17: முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளும் வங்கி கணக்கில் செலுத்துவதால், முதியோர் அலைச்சலுடன் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் முதியோர் உதவி தொகை, விதவை உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பெயர்களில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 50ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.50ல் தொடங்கி தற்போது ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலகம் மூலம் வீடுகளுக்கே சென்று அஞ்சல் ஊழியர்கள் முதியோரிடம் உதவித்தொகை, பென்சன் உள்ளிட்டவைகளை வழங்கி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து உதவித்தொகைகளும் வங்கியில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து உதவித்தொகை பெறுபவர்கள் வங்கியில் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அப்பகுதியில் உள்ள நகரத்தில் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்குமாறு கூறப்பட்டது. இவ்வாறு வங்கி கணக்கு தொடங்கவே முதியோர் கடும் அவதியடைந்த நிலையில், உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.