பரமக்குடி, அக்.15: பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தை தீ விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு தினத்தை முன்னிட்டு பரமக்குடி தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பரமக்குடி ஐந்து முனை அருகே நடைபெற்றது. அதில், சமையல் செய்யும் பெண்கள் சமைத்தப்பின், ரெகுலேட்டரை அணைத்து விடுவது, சமையல் சிலிண்டரில் தீ ஏற்பட்டால் பாதுகாப்பாக அணைப்பது, வீட்டின் கதவுகள், பள்ளி நடக்கும் போது, வகுப்பறை கதவுகள் மற்றும் அவசர வழிகளை திறந்து வைப்பது, வணிக வளாகங்களில் தீ பாதுகாப்பு கருவிகளை பொருத்துவது, நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது, முதல் உதவி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்.
இதில் பரமக்குடி தீயணைப்பு மீட்புப்பணித்துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பரமக்குடி தாசில்தார் சரவணன் உள்பட ஏராளமானோர் பார்த்தனர்.