நாகர்கோவில், அக்.15 : குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை நாகர்கோவிலில் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நேற்று (14ம் தேதி) தொடங்கியது. நவம்பர் 3ம் தேதி வரை 21 நாட்கள் இப்பணி நடக்கிறது. இதில், 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் கலப்பின கால்நடைகளில் இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடைகளை தாக்குகிறது. இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் தாக்குதலினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினைபிடிப்பது குறைகிறது. இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது.