நாகர்கோவில், அக்.15: நாகர்கோவிலில் மின் வாரிய கட்டண வசூல் மையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. முதல் 100 யூனிட் இலவசமாகும். அதன் பின் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் பிரதி மாதம் 15ம்தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு, மின் கட்டணம் குறிக்கப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என மாற்றப்பட்டது. நாகர்கோவிலில் டிஸ்லரி ரோட்டில், மின்வாரியம் சார்பில் பிரதான மின் கட்டணம் வசூல் மையம் உள்ளது. வடசேரி, கிருஷ்ணன்கோவில், ஒழுகினசேரி, வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, பார்வதிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ளவர்கள் இங்கு தான் மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். இங்கு மின் கட்டணம் வசூலிக்க, 9 கவுண்டர்கள் இருந்தன. மின் கட்டணம் செலுத்தும் முறை மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து இவற்றில் 6 கவுண்டர்கள் மூடப்பட்டன. ஏதாவது 3 கவுண்டர்கள் மட்டும் இயங்கும். நேற்று காலை 8.30 மணி முதல் வழக்கம் போல் மின் கட்டண வசூல் தொடங்கியது. திடீரென ஒரு கவுண்டரில் கம்ப்யூட்டர் பழுதாகி விட்டதால், 2 கவுண்டர்கள் மட்டுமே இயங்கின.