தூத்துக்குடி, அக். 15: முக்காணி, வாழவல்லான் பகுதிகளில் மாசுபட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கலெக்டரிடம் குற்றம்சாட்டிய கிராம மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து வைகுண்டம் ஒன்றியம், முக்காணி கிராம மக்கள் திமுக செயலாளர் மூக்காண்டி என்ற நட்டார் தலைமையில் திரண்டுவந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: முக்காணி கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு வாழவல்லான் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 1 மாதமாத சுத்திகரிக்கப்படாமல் கலங்கலாக மாசுபட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நிறம் மாறி வரும் இந்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் உண்டாகிறது. எனவே, இதுவிஷயத்தில் குடிநீர் வடிகால் வாரியம் குடிநீரை முறையாக சுத்திகரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே போல் ஏரல் பகுதியில் உள்ள கழிவுநீரோடைகளை ஆற்றில் கலக்காமல் தடுத்துநிறுத்தி பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.