திருவாடானை, அக்.10: திருவாடானை வடக்கு ரத வீதியிலுள்ள முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில், ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். திருவாடானை வடக்கு ரத வீதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் புரட்டாசி மாத திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்றன. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைகள் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்வாக கடைசி நாளான நேற்று பால் காவடி, பறவைக் காவடி, பூக்குழி இறங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு ரதவீதி பொதுமக்கள் செய்திருந்தனர்.