சாயல்குடி, அக்.10: சாயல்குடி குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் தெருக்களில் அடிப்படை வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். சாயல்குடி அண்ணா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.464.28 லட்சங்கள் மதிப்பீட்டில் 92 வீடுகள் கட்டப்பட்டது. இதிலுள்ள அனைத்து வீடுகளிலும், பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது வீடுகள் மற்றும் தெருக்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் கூறும்போது, கட்டிடம் கட்டப்பட்டு பத்து வருடங்களே ஆன நிலையில் கட்டிடம் வலுவிழந்து காணப்படுகிறது. வீடுகளுக்கு போடப்பட்ட குடிநீர் வசதி உவர்ப்பு தண்ணீர் என்பதால், பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்குகிறது. ஆனால் தண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.5 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அடுக்குமாடி வீடுகளின் தண்ணீர் குழாய்கள், கழிவறை குழாய்கள் சேதமடைந்து கிடப்பதால், தண்ணீர் வழிந்தோடி கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது. தெருக்களில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் வசதியில்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன் தேங்கியே கிடக்கிறது.