மதுரை, அக். 10: வெளிநாடுகளில் உள்ள ஆற்றங்கரை போல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை வைகை நதி புதுப்பொலிவு பெறப்போவதாகவும், இதற்காக இரு பக்க கரைகளிலும் பச்சை பசேலென பூங்கா அமைத்து, ஒளி வெள்ளம் பாய்ச்சும் விதமாக எல்இடி பல்புகள் பொருத்தி அழகாக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது. ஆனால், வைகை நதியின் அகலத்தை குறைத்து ஓடையாக மாற்றப்பட்டு வருவதாக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகரை குறுக்கிடும் வைகை ஆற்றில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக பொதுப்பணித்துறையிடம் தடையில்லா சான்று கோரப்பட்டது. ஆற்றை எந்த விதத்திலும் சுருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தடையில்லா சான்றை பொதுப்பணித்துறை மதுரை மாநகராட்சிக்கு வழங்கியது. பின்னர் மாநகராட்சி அனுமதி கோரியதன் பேரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை நதியை புதுப்பொலிவாக்க ரூ. 81.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து வைகை ஆற்றின் தென்பகுதியில் 84, 85, 53 ஆகிய வார்டுகள், வடபகுதியில் 40, 39, 38, 35 ஆகிய வார்டுகள் வரை ஆற்றுக்கரை பகுதிகள் புதுப்பொலிவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ராஜா மில்ரோட்டில் துவங்கி குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின் இருபுறமும் கான்க்ரீட் சுவர் எழுப்பப்படுகிறது. கரையில் சுவருக்கு வலது பக்கப்பகுதிகள் பூங்காவாக உருவாக்கப்படவுள்ளது. மேலும் ஆற்றுப்படுகை முழுவதும் புதர்கள், முட்செடிகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்படுத்தும் பணி விரைவில் துவங்க இருக்கிறது.