சேலம், அக்.10: சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. பொதுச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்து, தலைவர் பசுபதி பேசுகையில், ‘‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகம், தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடித்து வருகிறது. எனவே, இதனை கண்டித்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை (11ம் தேதி) மாலை பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.