திருவள்ளூர், அக். 9: அரசு தலைமை மருத்துமனையில் படுக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் தரையில் படுத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு உடல் நல குறைவு, விபத்து சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் உள், வெளி நோயாளிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிட வசதி, படுக்கை வசதி மற்றும் தேவையான நவீன மருத்துவ கருவி வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஒரு படுக்கையில் இரண்டு பேருக்கும், படுகாயம், காயம் அடைந்த பலரை தரையில் படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கும் அவல நிலை உள்ளது.'